பாவேந்தரும் நானும்
சிறுவயதில் ஏப்ரல் மாதம் வந்தாலே எனக்கு என் பிறந்த நாள் தான் ஞாபகத்திற்க்கு வரும். இப்பொழுது ஏப்ரல் மாதம் வந்தால் “Increment” தான் நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் என்னோடு இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யார் என்று ஆராய தோன்றும். ஹிட்லர், சதாம் உசைன் போன்ற “பிரபலங்கள்” பலர் இந்த மாதத்தில் பிறந்தவர்கள். சச்சினோடு பிறந்த தேதியை பகிர்ந்து கொண்டதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு [வருடம் வேறு
] . அந்த வரிசையில் வருபவர் பாரதிதாசன். அவருடைய பிறந்த நாள் ஏப்ரல் 29.
பள்ளி, கல்லூரி காலத்தில், என் புத்தகத்தில் முதல் பக்கத்தில் என் பெயருக்கு அடுத்து எனக்கு பிடித்த வாசகம் எழுதி வைப்பேன். அந்த வகையில் பாரதிதாசனின் இந்த வரிகள் மிகவும் கவரப்பட்டு எழுதி வைத்தேன் என் 11ம் வகுப்பில்.
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்”
ஓரு தடவை என் தமிழ் ஆசிரியர் அதை பார்த்துவிட்டு என்னை கேலி செய்தது இன்னும் என் நினைவில் உள்ளது. எனக்கு பிடித்த வரிகள் சில அவரின் பாட்டில் இருந்து…
“சாதலெனில் இருவருமே சாதல் வேண்டும்
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்”
எல்லார்க்கும் எல்லாம் எனும் பொதுவுடைமைக் கொள்கையை அவர் இவ்வாறு பாடி இருப்பார்
“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ”
சினிமாவில் வந்து போனதாலோ என்னவோ இந்த பாடல் எல்லா தலைமுறைக்கும் தெரிந்த ஹிட் பாடல்.
“தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!”
############################################################
இப்பொழுதெல்லாம் சுப வீர பாண்டியன் சொன்ன இந்த கவிதை அடிக்கடி என் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது.
எதிர்வினை
சிறு வயதில்
உன்னை
தொட்டிலில்
ஆட்டுவதற்கு
எனக்கும்
இப்பொழுது
என்னை
முதியோர் இல்லம் வந்து
பார்ப்பதற்கு
உனக்கும்
நேரம் இல்லாமல்
போய்விட்டது.